Tuesday, October 22, 2013

KAVANAGAR

'திருக்குறள்'


இராம கனகசுப்புரத்தினம்
பதினாறு கவனகர், சோடச அவதானி
Artist of 16 Memories - Sodasa Avathani


தம் தந்தையின் மறைவோடு மறைய இருந்த நினைவாற்றல் கலைக்குத் தன்னை ஒப்படைத்து அக்கலைக்குப் புத்துயிர் அளித்தவர். 

இவருடைய தந்தை - பதின் கவனகர் - நினைவுக்கலை ஏந்தல் திருக்குறள் பெ. இராமையா அவர்களின் மறைவிற்காக, 'இலக்கியவீதி' செங்கற்பட்டில் நிகழ்த்திய இரங்கல் கூட்டதின்போது, 'இந்த அரிய கலையை மீண்டும் உயிர்ப்பிப்பேன்' என்று எழுந்தவர் இவர்.

திருக்குறள் பெ.இராமையா


அதற்காக, தாம் செய்து வந்த வருமானம் மிகுந்த தொழில்களைத் துறந்தவர். 12 ஆண்டுகள் சிவகாசி விக்டோரியா மேனிலைப்பள்ளியில் ஆசிரியப்பணி, 4 ஆண்டுகள் 'பியர்லெஸ்' சேமிப்பு நிறுவனத்தின் அமைப்பாளர் பணி, துணி வணிக அனுபவம், அறிவுடை மக்களைப் பெற்ற இல்லறம், இளமையில் வறுமைத் துயரம் இப்படிப் பல நிலைகளில் செறிந்த வாழ்க்கை அனுபவம் பெற்றவர். 

பேச்சில் இனிமை; காட்சியில், உள்ளத்தில் எளிமை; மனத்துக்கண் மாசின்மை; எண்ணிய எண்ணியாங்கு எய்தும் வினைத்திண்மை- இவை, இவரின் தனித்தன்மைகள்! 

அரம்போல் கூரிய அறிவுடையவர். ஆயினும் மக்களோடு மக்களாக வாழும், பழகும் இவர் ஒரு 'மககள் அறிஞர்'! 

17.6.1987 -ல் திருக்கழுக்குன்றத்தில் 'இலக்கியவீதி' அரங்கில் பதின்கவனகராக அரங்கேற்றமாகி, தமிழகமெங்கும் பல்வேறு மேடைகளில், கல்லூரிகளில், பள்ளிகளில், தொலைக்காட்சியில், வானொலியில் இக்கலை நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். 

இன்றோ, 'பதினாறு கவனகராக' உயர்ந்து, தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியா, சீங்கப்பூர், அந்தமான் தீவுகள், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, கீழ்த்திசை நாடுகள் என, தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் சுற்றி, நம் தமிழ்மறையாம் திருக்குறளைப் பரப்பி வருபவர். வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வையும், மகிழ்ச்சியான வாழ்வை எப்படி மலரவைப்பது என்ற பயிற்சி வகுப்பையும், நினைவாற்றல் பயிற்சி வகுப்பையும் நடத்தி வருபவர். 

சாதி, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இவர் இக்கலைக்கு என்று இருக்கும் தமிழகத்தின் சொத்து! பொதுச் சொத்து! 

சென்ற நூற்றாண்டில், ஒரு நூறு செயல்களைச் செய்யும் கவனகர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில், இன்று இக்கலைக்கு என்று வாழ்பவர் இவர். இவர்தம் வாழ்வும் வளமும், இக்கலையின் வாழ்வும் வளர்ச்சியும் ஆகும். 

தமிழ் நாட்டில் கடந்த 400 ஆண்டுகளாக இருந்துவரும் ஒரு பழங்காலக் கலையே 'கவனகம்' அல்லது 'அவதானம்' என்பதாகும். 

இது மனதை போல் பயன்படுத்திச் செய்யப்படும் வித்தை ஆகும். அதாவது மனிதனின் மனதை (மூளையை) எப்படியெல்லாம் பயன்படுத்தி பல்வேறு வித்தைகளை நிகழ்த்த முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஊட்டும் ஒர் அற்புதமான கலை நிகழ்ச்சி. 

8 வகையான ஆற்றல் புரிபவர் - அஷ்டாவதானி 
10 வகையான ஆற்றல் புரிபவர் - தசாவதானி 
16 வகையான ஆற்றல் புரிபவர் - சோடவதானி 
100 வகையான ஆற்றல் புரிபவர் - சதாவதானி 

இவரது தந்தை திருக்குறள் பெ. இராமையா தசாவதானியாகத் திகழ்ந்து 'அரசவைக் கலைஞராக' உயர்ந்து மறைந்தவர். 

நமது கவனகர் இராம. கனகசுப்புரத்தினம் அவர்கள் பதினாறு கவனகராகத் திகழ்ந்து நமக்கெல்லாம் ஞான விழிப்புணர்வூட்டி வாழ்ந்து கொண்டிருப்பவர். 

இவர் நிகழ்த்தும் பதினாறு கவனக நிகழ்ச்சிகள்

1. குறள் கவனகம் 
2. எண் கவனகம் 
3. எழுத்துக் கவனகம் 
4. பெயர்க் கவனகம் 
5. வெண்பா இயற்றும் கவனகம் 
6. இராகங்களில் கவனகம் 
7. மாயக்கடட்ம் நிரப்புதல் 
8. கூட்டல் கவனகம் 
9. பெருக்கல் கவனகம் 
10. 100ஐ முடிக்கும் கவனகம் 
11. வண்ணக் கவனகம் 
12. தொடுவுணர்வு கவனகம் 
13. மணியோசை (கேட்டல்) கவனகம் 
14. லாடசங்கிலி பூட்டி, கழற்றுதல் 
15. பிறந்த கிழமை கூறுதல் (பிறந்த நாள் கூற) 
16. திருக்குறளில் பலவிதமான கேள்விகள். 

விளக்கம் குறுந்தகட்டில் காண்க. 

இவரது குறிக்கோள் மக்களை (குறிப்பாக இளைஞர்களை) அவர்களுடைய மனதை முழுமையாகப் பயன்படுத்தி ஞான மலர்ச்சி பெறவைப்பதும், நமது இந்திய நாடு அமைதியான வல்லரசு நாடாக 2020ல் திகழ வேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விரும்பியபடி அமைய வேண்டும் என்பதே.

No comments:

Post a Comment